திங்கள், மார்ச் 12, 2012

தமிழ்த் திரைப்படம் 'அரவான்' - ஒரு பார்வை

'அரவான்' - தமிழ்த் திரைப்படம்.


நம் முன்னோர்களை முன்னோர்களில் நல்லோர்களை நடுகல்களாகவும் குருசடிகளாகவும் கல்லறைகலாகவும் ஊர்தோறும் குலசாமியாக வைத்திருக்கிறோம், வணங்கி வருகிறோம்... அதோடு அவர்களின் வாழ்வியலும், நன்மை தீமை நீதி வாழ்விற்கான போராட்டம்  அன்பு காதல் வீரம் எல்லாம் கலந்திருக்கு..  இது நாட்டிரியல், நாட்டுப்புறவியல் என்கிறோம்... அப்படிப்பட்ட நம் தமிழ் மண்ணின் தென்றலும் தூசியும் கலந்த புழுதிக் காற்றை தமிழனின் கதையை நம் முன்னாடி கொண்டு வந்து சேர்த்த அந்த எழுத்தாளனுக்கும், திரை வடிவம் கொடுத்து உயிர் கொடுத்த இயக்குனருக்கும் எம் நன்றிகள்.

வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை நாம் சீர்படுத்தி சமுதாயத்திற்கு ஏதாவது வகையில் உதவியோடு சமூக நல்லுறவிற்கு தூண்டும்... அந்த வகையில் வசந்த பாலனின் 'அரவான்' என்ற நிகழ்வு பல பேரின் கண்களை திறக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை...

சமுதாயத்தில் முன்னொருகாலத்தில் கொடுரூமான உயிர்பலி புரையோடிக்கொண்டிருந்துள்ளது ... அதிகாரப்பீடங்கள், ஆண்ட வம்சங்கள் எப்படி அதனை அடிமை வம்சங்கள் மீது அதனை பயன்படுத்தி கொண்டிருந்தது எனபதை மிக தெளிவாய் பதிவு செய்திருக்கிறார்கள்... அந்த கொடிக்கும் (பாளையம், பாளையத்திற்கு மேல் இருந்த மாமன்னர்), சாமியின் மீது இருந்த பயபக்திக்கும் இருந்த மக்களின் மரியாதையை எப்படி தங்கள் சுயநலத்திற்காகவும், ஏகபோக வாழ்விற்காகவும் தந்திரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற முடிச்சியை கடின உழைப்பின் மூலம் அவிழ்திருக்கிறார்கள் நம் அண்ணன்மார்கள். இந்த உயிர்பலி கொடுமைக்கு சமதையானது, நம்மை அடிமைகளாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் உயர்த்த சாதி தாழ்ந்த சாதி என சாதிய ஏற்றத்தாழ்வையும் நம் சமுதாயத்தோடு தமிழர்களிடையில் பிண்ணிபிணைக்கப்பட்ட நிகழ்வும்... இந்த உயிர்பலியின் பின்புலமும் அதுதான்... இதனை நாம் புரிந்துகொள்ளாவிடில் அவர்களின் முயற்சி பயனற்றதாகிவிடும்...

"காக்கா, குருவியைத்தான் பலி கொடுப்போம், யானையை யாராவது பலிகொடுப்பார்களா?" என்கிறான் பாளையக்காரன்... சக மனிதனை சமமாக பார்க்காது பேசும் இந்த பாளையம் வேறு யாரும் கிடையாது, வடக்கில் விஜயநகரத்தில் இருந்து பாண்டிய மன்னர்களுக்கு உதவி செய்யும் சாக்கில் உள்ளே வந்து மதுரை பேரரசைப்பிடித்த நாயக்கர்களின் வழிவந்த சிற்றரசன்... நம்மை பொறுத்தவரையில் மனிதர்கள் அனைவரும் சமம், பிறப்பால் ஒருவன் மற்றவனை விட உயர்ந்தவனாகி விட முடியாது... அப்படின்னா தமிழர்களிடையில் மட்டும் ஏற்றத்தாழ்வு இருக்கலாமா? ஆரியர்கள், மராட்டியர்கள், நாயக்கர்கள் என வெள்ளைக்காரன் வரை அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக நம்மை அடிமையாக்கி அவர்களைவிட தாழ்ந்தவர்களாக வைத்திருந்தார்கள்... இன்று நமக்குள் நம் மக்களையே தாழ்ந்த்தவர்கள் என பார்க்கலாமா?

அந்த அரசுகளின் ஒடுக்குமுறை அழிந்தொழிந்தாலும் இன்றைக்கும் வேறொரு வடிவில் அரசியல் ரீதியாக நம் உரிமைகளை வழங்காமல் பறிக்கப் பார்க்கிறார்கள்... அதற்கு இந்த சாதிய ஏற்றத்தாழ்வு இன்னமும் சிலருக்கு தேவைப்படுகிறது, அது புரியாமல் நாமும் அப்பாடா, நான் ஒருவனை விடவாவது உயர்வாக பிறந்துவிட்டேன் என்று பெருமை கொள்கிறோம்... நான் சாதியே பார்ப்பதில்லை என்று சொல்லும் நல்ல உள்ளங்கள், நண்பர்கள் தயவுசெய்து உங்களைச் சுற்றி தொண்டூழியம் செய்பவர்கள் ஏன் ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களாய் இருக்கிறார்கள், இந்த வேலைகளெல்லாம் ஈன வேலை, அதை செய்பவர்கள் ஈன சாதிக்காரர்கள் என்பதை பார்த்தாலே புரியும்... சாக்கடை அள்ளும் தொழிலில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் மட்டும் உள்ளான், கோவில் அர்ச்சகராக பார்ப்பான் மட்டும் உள்ளான்... ஒன்று உள்ளதிலேயே மோசமான வேலை... ஈனச் சாதிக்காரன் தான் செய்ய வேண்டும்... மற்றொன்று கடவுளுக்கு அருகில் இருக்கும் உயர்வான வேலை, அதனை உயர்த்தப்பட்ட சாதிக்காரன் மட்டும் செய்ய வேண்டும்... ஏன் மாறினால் கடவுளுக்கு உகந்தது ஆகாதா? யார் இதனை முடிவு செய்தது, கடவுளா? ஆண்ட வம்சங்களா? பேராலய அதிகாரங்களா? இது ஒரு உதாரணம், இதைப்போல பல உதாரணங்கள் பார்க்கலாம், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றும் கீழ்மட்ட வாழ்க்கையில்தான் உள்ளார்கள்... நம் அலுவலகத்தில் இருக்கும் கடைநிலை ஊழியர்கள், சாலைப் பணியாளர்கள், வீட்டு வேலைக்கு போகிறவர்கள், மலம் சாக்கடை அள்ளுபவர்கள் என அனைத்து தொண்டு செய்யும் பணிகளிலும் அவர்கள் தான்... அவர்களின் அடுத்த தலைமுறை முன்னேற்றப்பாதையில் செல்கிறதா என பார்ப்பது என்பது நம் கடமை... அதைவிட்டுவிட்டு அவர்களை கீழாகப் பார்ப்பது நம் மடமை :((

அன்றைக்கு பாளையம் உயிர்ப்பலியை தீர்மானித்தது, இன்றைக்கு வேறொரு வடிவில் அரசியல் செய்து அதே வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்... தவறுகள் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்... தவறுகள் செய்த உயர் குடிகள் மட்டும் தண்டனைகளில் இருந்து எளிதாய் தப்பிப்பதும், தவறு செய்யாத அப்பாவிகள் இன்றும் தண்டிக்கப்படுவதும் இன்றும் பாளையக்காரன் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறான் என்றே தோன்ற வைக்கிறது...மூவர் தூக்கு ஒரு உதாரணம், செய்யாத குற்றத்திற்கு இருபத்தோரு வருடங்கள் மரணக்கொட்டடியில் தினம் தினம் என்று எனக்கு மரணம் என்று தவிப்பது சாவைவிட கொடுமையானது... அரசே நீ உண்மையில் மக்களின் அரசுதானா..? மக்களாட்சி, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எல்லாம் சும்மா பேச்சிதான் போல... ஆளும் வர்க்கம் என்றும் ஆளும் வர்க்கமாகவே உள்ளது, பாட்டாளி மக்கள் எப்போதும் பாட்டாளிகளாகவே உள்ளார்கள்... பணபலம், அரசியல் பலம், சாதிபலம் இல்லாமல் சமூகத்தில் சாதாரண மக்களுக்கு நீதியோ உரிமையோ சுதந்திரமோ கிடைக்காது என்று குழந்தைக்கும் செய்தி ஊட்டப்படுகிறது... அதுவே குழந்தையின் கல்வியையும் பலக்கவலக்கங்களையும் தீர்மானிக்கிறது... அடுத்த தலைமுறையின் உருவாக்கத்தை பார்த்தால் கவலையாக உள்ளது, அதேநேரத்தில் நமது கடமையும் புரிகிறது...

சின்னானன் என்ற ஒரு வீரத்தமிழன் மரித்து இன்று பல சின்னானன்களுக்கு உயிர் கொடுத்து சென்று விட்டான்... அவன் விரும்பியதும் அதுவே... அவனின் மரணம் ஒரு விதை. அது நிலத்தில் முளைக்காது, நம் மனத்தில் முளைக்க வேண்டும். இந்த கருவுக்கு உயிர் கொடுத்த வசந்த பாலன் அண்ணனுக்கு மீண்டும் நன்றிக்கூறிக் கொள்கிறேன்.

வணக்கம். (இன்னும் விமர்சனம் எழுத ஆரம்பிக்கவில்லை :))


நல்ல விமர்சனம் எழுதிய நண்பர் மோருவின் (Morarji Subramanian - http://www.facebook.com/profile.php?id=100001835603956) பதிவின் முகவரி இங்கே தருகிறேன்... அதையும் படியுங்கள்.

http://thonipuram.blogspot.in/2012/03/blog-post.html


என்னொரு கோணத்தில் நண்பர் பிராசாத்தின் (Prasath Venugopal - http://www.facebook.com/profile.php?id=552507148) வரிகளில்:

படத்தை படமா மட்டும் பாருங்க... விமர்சனம் எழுதணும்னோ இல்லை குத்தம் குறையைக் கண்டுபுடிச்சு விவாதிக்கணும்னோ பார்க்காம ஒரு என்டெர்டெயினரா பாருங்க...

படம் என்னை ரொம்பக் கவர்ந்தது... சமீபத்திய திரைப்படங்களில் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படம் அரவான்...

ஒரு பாளையக்காரன், அவனது வயசான காலத்தில் இன்னொரு பாளையத்தை அடிமை செய்து அவன் பொண்ணைத் தூக்கிட்டு வந்து கட்டிக்கிட்டான்... அவனைக் கட்டிக்கிட்டவ அவனுக்கு ஆண்மை இல்லைன்னு தெரிஞ்சதுமோ அல்லது அவனைத் தன்னைத் தொடவே விடாம வைச்சுக்கிட்டு, அவனைப் பழி வாங்க ஒரு அத்தர் விற்கும் வியாபாரியுடன் அடிமையுடன் கூடி கர்ப்பமாயிருக்கிறாள். அதனைக் கேள்விப்பட்ட பாளையக்காரன் மருத்துவச்சியிடம் கர்ப்பத்தை கலைக்கச் சொல்கிறான். கலைக்க விடாமல் தனது தந்திரத்தைச் சொல்லும் சின்ன ராணியையும், அவள் கர்ப்பத்திற்கு காரணமானவனையும் கொலை செய்கிறான்.
அந்த அத்தர் வியாபாரி கொலை செய்யப்படும் கிராமம், அத்தர் வியாபாரியின் கிராம்த்திற்கு தீரா பகையுள்ள கிராமம். அந்த கொலையால் ஏற்படும் கலவரத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவன் கொலை செய்த பாளையக்காரன்.

கொலை செய்தவன் ஒப்புக் கொண்டானா, ஒப்புக் கொண்டால் தன் ஆதிக்கச் சாதியின் மானம் போய் விடூமே என்று உயிர் போகும் வரையில்/ உயிர் போன பின்னாலும் ஒப்புக் கொள்ளவில்லை. அவனது கொலையை மறைக்க தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமத்தான் யாரோ ஒருவனைக் பலிகடாவாக்குகிறான். இது ஆதிக்க மனப்பாண்மை இல்லை என்று சொல்கிறீர்களா...? அவன் கொலையை ஒப்புக் கொண்டிருந்தால்  அவனது உயிர்/மானம் மட்டுமே பறி போயிருக்கும். அப்படி செய்யாது போகவே இரு மனித உயிர்கள் கொலையாக்கப்படுகிறது பலி என்ற பெயரால் அத்தோடு அவனது உயிரும் போகிறது...

ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணாதீங்க... எம்புட்டோ செலவு செய்றோம்... தியேட்டர்ல போய் பாருங்க படத்தை...

கருத்துகள் இல்லை: